நூல்: இஸ்லாமியப் பெரியார் தாவூத் ஷா ஆசிரியர்: முனைவர் அ அய்யூப் பக்கங்கள்: 160 விலை: ரூ 90 வெளியீடு: நவமணி பதிப்பகம் 44 எல்டாம்ஸ் சாலை சென்னை 600 018 தொலைபேசி : 2434 0523
மறக்கப்பட்ட ஒரு மனிதரை நினைவுபடுத்தி இருக்கிறார் முனைவர் அ. அய்யூப்.
கம்பராமாயண சாயபு, நாச்சியார்கோவில் தாவூத் ஷா என்று பல பெயர்களால் அழைக்கப்பட்ட பன்முகத் தோற்றம் கொண்டவர் இலக்கியவாதி அறிஞர் பா. தாவூத் ஷா.
அவரைப் பற்றி மிகவும் பிரையாசைப்பட்டு பல இடங்களில் அலைந்து, தேடித்தேடி, பல பேரிடம் விசாரித்து, விஷயங்களை அவரவரது நினைவுப் பதிவேடுகளிலிருந்து பெயர்த்து தந்திருக்கிறார் அய்யூப். ஓர் ஆய்வு நூலுக்கு தேடுவதைப் போல விஷயங்களைத் தேடி கோர்த்திருக்கும் நேர்த்தி சுவையானது.
நூலிலிருந்து சுவையான சில பகுதிகள்:
உலகப் புகழ்பெற்ற கணித மேதை இராமனுஜரும், தாவூத் ஷாவும் ஒரே வகுப்புத் தோழர்கள், நெருங்கிய நண்பர்கள். அவர்களது நட்புக்குக் காரணமாக இருந்தது தாவூத் ஷாவிடமிருந்த தமிழறிவு. இராமானுஜருக்கு தமிழ்ப் பாடம் சரியாக வராது. தாவூத் ஷாவிற்கு கணிதப் பாடம் வராது. எனவே இருவரும் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டனர்.
குர்ஆன் மொழிபெயர்ப்பு:
குர் ஆன் முழுவதையும் பொருளுரையும் விரிவுரையும் சேர்த்து தமிழில் வெளியிட வேண்டும் என்பது தாவூத் ஷாவின் கனவு. தனது இறுதிக் காலத்துக்குள் திருக்குர் ஆன் முழுவதையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுவிட வேண்டும் என்ற ஆர்வம் அவரது நெஞ்சில் முள் போல் உறுத்திக்கொண்டிருந்தது. அவருக்கு 70 வயதானபோது தாருல் இஸ்லாமி இதழை நிறுத்திவிட்டு முழுமையாக குர் ஆன் மொழிபெயர்ப்பில் இறங்கினார்.
இதற்கு அன்றைய உலமாக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இதையும் மீறி அவர் அச்சேற்றினார்.
இது காதியானி மொழிபெயர்ப்பு, காபிர் மொழிபெயர்ப்பு, இதனை முஸ்லிம்கள் வாங்கக்கூடாது என்று அன்றைய உலமாக்கள் பிரச்சாரம் செய்தார்கள். இதனால் தொடர்ந்து தொகுதிகளை வெளியிட முட்டுக்கட்டை விழுந்தது. நான்காம் தொகுதிக்கு தைக்கா சுஐபு ஆலிம் 13,000 கொடுத்தார்கள்.
1967 இல் ஐந்தாம் தொகுதி வெளிவந்தது. இதற்குள் உலமாக்களின் தாக்குதல் அதிகமாயிற்று. தாவூத் ஷாவும் நோயில் படுத்துவிட்டார்.
சீர்திருத்தக் கருத்துக்கள்:
பள்ளிவாசல்களில் குத்பா சொற்பொழிவுகள் தமிழில் நடத்தப்பட வேண்டும் என்றார் தாவூத் ஷா. தர்காக்களில் வணக்கம் கூடாது. முஸ்லிம்கள் வேப்பிலை அடிக்கக்கூடாது. கறுப்புக் கயிறு கட்டக்கூடாது. நாள், நட்சத்திரம் பார்க்கக் கூடாது. முஸ்லிம் பெண்களை படிக்க வைக்க வேண்டும் என்றார்.
இதழியலாளர்:
சமுதாயப் பணிக்கு ஓர் இதழ் தேவை என்று 1919 ஆம் ஆண்டு நாச்சியார்கோயிலில் தாருல் இஸ்லாம் பத்திரிகையைத் தொடங்கினார். 1923ல் அந்த இதழ் சென்னைக்கு வந்தது. 1957 ஆம் ஆண்டு வரை 38 ஆண்டு காலம் அந்தப் பத்திரிகையை அவர் நடத்தி இருக்கிறார்.
இதழ் நடத்துவது என்பது நெருப்பு ஆற்றை நீந்திக் கடப்பது போல' என்று ஆதித்தனார் கூறுவார். 38 ஆண்டுகாலம் அவர் நெருப்பாற்றில் நீந்தினார்.
கலைஞரைக் கவர்ந்த தாருல் இஸ்லாம்:
தாருல் இஸ்லாம் குறித்து முதல்வர் கருணாநிதி கூறுகையில், அந்தக் காலத்தில் நான் பள்ளியில் பயிலும் போது ஒரு கையிலே குடி அரசு ஏடு, இன்னொரு கையிலே தாருல் இஸ்லாம் என்கிற முஸ்லிம் லீக்கிற்காகப் பிரசாரம் செய்கிற நாளேடு. இவைதான் எங்கள் கைகளை அலங்கரிக்கும் என்று கூறியுள்ளார்.
நன்றி:
நம்பிக்கை மாத இதழ், மலேசியா அக்டோபர் 2007
NAMBIKKAI YPI Publication 29B JALAN PJS 10/24 Bandar Sri Subang 46000 Petaling Jaya Selangor Darul Ehsan Malaysia Tel : 603 5631 4802 Fax : 603 5632 8025 E mail : nambikkai@gmail.com
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களது ஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.