தெற்றுப் பல் சித்தாரா மீண்டும் திரையில் மின்ன ஆசைப்பட்டு அரிதாரம் பூசத் தொடங்கியுள்ளார்.
பாலச்சந்தரால் புதுப்புது அர்த்தங்களில் அறிமுகமானவர் சித்தாரா. புதுவசந்தம் உள்பட எக்கச்சக்க படங்களில் நடித்தார். ரஜினியின் தங்கையாக படையப்பாவிலும் நடித்திருந்தார்.
இடையில் சில வருடங்கள் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். கேரளாவில் வசித்துவரும் அவரை, மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க அழைத்துவருகிறார் இயக்குநர் சாமி.
சாமி இப்போது இயக்கிக் கொண்டிருக்கும் புதிய படமான சரித்திரத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடிக்கிறார் சித்தாரா.
முதலில் இந்த வேடத்தில் நடிக்க ஒப்பந்தமானவர் தொப்புளில் பம்பரம் ஓடவிட்டுக் காட்டிய சுகன்யா. அவர் போட்ட கண்டிஷன்களைப் பார்த்து ஷோபனாவைத் தேடிப்போயிருக்கிறார் சாமி. அவரும் ஏடாகூடமாக கண்டிஷன்கள் போட, யோசித்த இயக்குநர் மனதில் சட்டென்று மின்னியவர் சித்தாராதான்.
சாமி பேசிய சம்பளம், போட்ட கண்டிஷன்களுக்கு உடனே ஒப்புக் கொண்டாராம் சித்தாராவும்.
இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் இம்மாத இறுதியில் தொடங்குகிறது. ராஜ்கிரண் மகனாக மிருகம் பட நாயகன் ஆதி, அவரது ஜோடியாக ஸ்ரீதேவிகா நடிக்கின்றனர்.
இந்தப் படத்தில் சாமி பஞ்சாயத்தில் மாட்டினாலும் கவலையில்லை... காப்பாத்த சண்டியர் ராஜ்கிரண் இருக்காரு!