கல்யாணம் செய்து கொண்ட பின்னரும் கூட தன்னைத் தேடி வந்த ஒரு மலையாளப் படத்தை மறுக்காமல் ஏற்றுக் கொண்டுள்ளார் கனிகா.
கோலிவுட்டில் அறிமுகமாகி மலையாளத்திலும் நல்ல பெயர் வாங்கியுள்ள நடிகை கனிகா. இந்த 'மதுரை மல்லி'க்கு சமீபத்தில்தான் கல்யாணம் ஆனது. இருந்தாலும் தொடர்ந்து நடிப்பதில் ஆர்வத்துடன் உள்ளார் கனிகா.
கல்யாணத்திற்கு முன்பு அவர் மம்முட்டியுடன் நடிக்க ஒப்புக் கொண்ட படம் பழசிராஜா. இப்படத்தில் சரத்குமாரும் நடிக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து சமீபத்தில் மேலும் ஒரு மலையாளப் படம் கனிகாவுக்குக் கிடைத்துள்ளது.
இப்படத்தில் அவர் ஜெயராமுக்கு ஜோடியாக நடிக்கிறார். சத்யன் அந்திக்காடு இப்படத்தை இயக்குகிறார்.
பழசிராஜாவும், ஜெயராமுடன் நடிக்கவுள்ள படமும் வெளியானால் கனிகாவுக்கு மலையாளத்தில் ஏக கிராக்கி ஏற்படும் என இப்போதே பேசிக் கொள்கிறார்கள்.
ஆனால் தமிழில் இப்போதைக்கு கனிகா கையில் எதுவும் இல்லை என்கிறார்கள். அவருக்கும் தமிழில் அவசர கதியில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இல்லையாம். நல்ல கேரக்டர்களாக இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்கிறார் கனிகா.