ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் சில்வஸ்டர் ஸ்டலோன் இந்திப் படம் ஒன்றில் நடிப்பது தெரிந்த செய்தி. அவர் இந்திக்கு வரக் காரணம் பூஜா பத்ரா என்பது புதிய செய்தி.
நம்ம ஊர் நடிகர், நடிகையர் ஹாலிவுட் படங்களில் அவ்வப்போது தலை காட்டுவது போல இப்போது ஹாலிவுட் திரைக் கலைஞர்களையும் நம்மவர்கள் நம்ம ஊர்ப் படங்களுக்கு நடிக்க அழைக்க ஆரம்பித்திருப்பது புதிய பேஷனாகி உள்ளது.
அந்த வகையில், ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சில்வஸ்டர் இந்திப் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டராக நடிக்கும் அக்ஷய், சில்வஸ்டருக்கு ஒரு சண்டைக் காட்சியை சொல்லித் தருவது போன்ற காட்சியில்தான் சில்வஸ்டர் உடல் காட்டவுள்ளார்.
சில்வஸ்டர் இந்திக்கு வர காரணமே நடிகை பூஜா பத்ராதானாம். தற்போது பூஜா லாஸ் ஏஞ்சலெஸில் செட்டிலாகி விட்டார். அவர்தான் சில்வஸ்டரை அணுகி இந்தப் படத்தில் நடிக்க அழைத்து வந்துள்ளார்.
இதுகுறித்து பூஜா கூறுகையில், உண்மைதான். எனக்கு ஹாலிவுட்டில் நிறைய நண்பர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் நம்ம ஊர்ப் படங்களில் நடிப்பது என்றால் மட்டும் ஓடி விடுவார்கள்.
இருப்பினும் சில்வஸ்டரை எப்படியாவது நடிக்க வைத்து விட வேண்டும் என்று நான் கடுமையாக முயன்றேன். மிகவம் சிரமப்பட்டுத்தான் நடிக்க ஒப்புக் கொள்ள வைக்க முடிந்தது.
சில்வஸ்டரும் எனது நண்பர்தான். இந்தித் திரையுலகம், இந்திய ரசிகர்கள் குறித்து அவருக்கு நான் நிறைய விளக்க வேண்டியிருந்தது. அதன் பிறகே அவர் ஒப்புக் கொண்டார். அது எனக்கு சந்தோஷமாக உள்ளது என்கிறார் பூஜா.