தாதா அபு சலீம் விவகாரம், போலி பாஸ்போர்ட் பஞ்சாயத்து ஆகியவற்றிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்துள்ள மோனிகா பேடி மீண்டும் நடிப்புக்குத் திரும்பியுள்ளார். தனது இரண்டாவது இன்னிங்ஸ் குறித்து அவருக்குள் பதட்டம் இருக்கிறதாம்.
அபு சலீமின் காதலியாக வலம் வந்தவர் பாலிவுட் நாயகி மோனிகா பேடி. அவருடன் போர்ச்சுகல் நாட்டில் இருந்தபோது லிஸ்பன் நகரில் வைத்து பிடிபட்டார். பின்னர் போர்ச்சுகல் அரசு, இந்தியாவுக்கு இருவரையும் நாடு கடத்தியது.
இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட மோனிகா பேடி போலி பாஸ்போர்ட் வழக்கை சந்தித்தார். அவர் மீது தொடரப்பட்ட இரு போலி பாஸ்போர்ட் வழக்குகளிலும் உச்சநீதிமன்றம் மோனிகாவுக்கு ஜாமீன் அளித்தது. இதையடுத்து விடுதலையாகியுள்ளார் மோனிகா.
பழைய பஞ்சாயத்தை கனவாக நினைத்து மறந்து விட்ட மோனிகா மீண்டும் நடிப்பின் பக்கம் கவனத்தைத் திருப்பியுள்ளார். மிகப் பெரிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்கவுள்ளார்.
தனது இரண்டாவது இன்னிங்ஸ் எப்படி இருக்குமோ, ரசிகர்கள் தன்னை வரவேற்பார்களா, திரையுலகம் எப்படி தன்னை நடத்தப் போகிறது என்பது குறித்து அவரிடம் பதட்டம் கலந்த பயம் ஏற்பட்டிருக்கிறதாம்.
இதுகுறித்து மோனிகா கூறுகையில், என்னைப் பற்றி நிறையப் பேசி விட்டனர், எழுதி விட்டனர். பலருக்கும் என்னைப் பற்றிய பயம் இருக்கிறது. ஆனால் அனைவருக்கும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் நான் சாதாரண பெண். உங்கள் மோனிகா. அதில் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடவில்லை.
எனவே முன்பு போலவே இப்போதும் எனக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார் மோனிகா.
'பேடி' ஆக வேண்டாம் மோனிகா!