பெங்களூர்: பொய்களை கவிதைகளாக எழுத வேண்டாம் என்று சக கவிஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் கவிஞர் வைரமுத்து.
பெங்களூர் பிரசிடென்சி கல்லூரி கன்னடப் பேராசிரியை மலர்விழி, வைரமுத்துவின் கவிதைகளில் பிரபலமான 33 கவிதைகள் மற்றும் கதைகளை கன்னடத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
கிறிஸ்தவப் பல்கலைக்கழகத்தின் கன்னட சங்கம் சார்பில் அந்த புத்தகங்களின் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் பேசிய வைரமுத்து கன்னடத்தில் வரவேற்றார். பின்னர் அவர் தமிழில் பேசியதாவது:
இன்று கன்னடத்து தோழர்களுக்கும் தமிழ் தோழர்களுக்கும் மகுடம் சூட்டும் நாள். இவ்விழாவின் கதாநாயகி மலர்விழி, கன்னடத்தில் மொழிபெயர்த்த எனது கவிதைகள் நம்மை இங்கு சேர்த்துள்ளன.
தமிழின் சங்க இலக்கியங்களை மொழிபெயர்க்க மலர்விழி விருப்பம் தெரிவித்துள்ளார். அதை மொழிபெயர்க்க ஆகும் செலவை வைரமுத்து அறக்கட்டளை ஏற்கும்.
நமக்குள் பேதமில்லை. திராவிடக் குழந்தைகள். ஒரே வேரிலிருந்து வந்தவர்கள். ஒவ்வொரு மொழிக்கும் தனித்தன்மை உள்ளது.
எனது இதயப் பையை நிரப்புவதற்காக கவிதைகளையும், எனது பணப் பையை நிரப்புவதற்காக அதாவது வயிற்றுப் பிழைப்பிற்காக திரைப்படப் பாடல்களையும் எழுதுகிறேன்," என்றார்.
பின்னர், பெங்களூர் தமிழ்ச்சங்கத்திற்கு வந்தார் வைரமுத்து.
இங்கு அவர் பேசுகையில், "நான் வருவதற்கு தேதி கேட்டு வாங்கிய முக்கிய இடம் பெங்களூர்த் தமிழ்ச் சங்கம்தான்.
கவிஞர்களுக்கு எனது வேண்டுகோள்... தயவு செய்து பொய்களை கவிதையாக எழுத வேண்டாம். உங்களது கவிதைகள் இதயத்தில் இருந்துவரும் உணர்ச்சியாக இருக்க வேண்டும். அதுவே நிலைத்து நிற்கும். தீபாவளி, பொங்கல், பிறந்தநாள் வாழ்த்து கவிதைகளை எழுத வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்றார்