திருநெல்வேலி:மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று நெல்லையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் தென்காசியில் கடந்த 14-ந் தேதி 6 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து அறிக்கை விட்டு வைகோ, இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களால் இளம் சிறார்களின் மனதில் பழிவாங்கும் உணர்ச்சிகள் அதிகரிக்கும். இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருக்க, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி தென்காசியில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார்.
பின்னர் இது நெல்லைக்கு மாற்றப்பட்டது. அதன்படி இன்று காலை நெல்லை பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகம் எதிரே வைகோ உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
மதிமுக எம்.பி. சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், எம்.எல்.ஏக்கள் சதன் திருமலைக்குமார், வரதராஜன், ஞானதாஸ், மதிமுக பிரமுகர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா உள்ளிட்ட மதிமுகவினர் பெரும் திரளாக இதில் பங்கேற்றுள்ளனர்.
உண்ணாவிரதத்தை முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் தொடங்கி வைத்தார். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரன், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹென்றி டிபேன், இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சமுதாயங்களைச் சேர்ந்த பெரும் திரளானோரும் இந்த உண்ணாவிரத்தில் பங்கேற்றுள்ளனர்.
தமிழ் சான்றோர் பேரவையைச் சேர்ந்தவர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.