டீசல் தட்டுபாடு: வேலூர்-விழுப்புரத்தில் பஸ்கள் ரத்து புதன்கிழமை, ஆகஸ்ட் 20, 2008
இலவச நியூஸ் லெட்டர் பெற
வேலூர்: டீசல் தட்டுப்பாடு காரணமாக வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் பஸ் போக்கவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஸ்டிரைக் ஒரு புறம் இருக்க, டீசல் தட்டுப்பாடும் அம்மாவட்ட மக்களுக்கு பெரும் அவதியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக்த்தின் பெரும்பாலான பகுதிகளில் டீசல் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடியது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் முதல் கனரக வாகனங்கள் வரை பெரும் அவதிக்குள்ளானது. பின்னர் அரசு மேற்கொண்ட முயற்சியால் பிரச்சனை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
தற்போது மீண்டும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தைத் தொடர்ந்து வேலூரிலும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் டீசல் தட்டுப்பாடு காணப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் வேலூர், குடியாத்தம், திருப்பத்தூர் உள்பட 8 இடங்களில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகள் உள்ளன. விரைவு மற்றும் டவுன் பஸ்கள் என்று 1,500 பஸ்கள் இந்த மாவட்டத்தில் இயக்கப்படுகின்றன.
தற்போது ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாடு காரணமாக முக்கிய வழித்தடங்கள் தவிர சாதாரண வழித்தடங்களில் செல்லும் பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல இடங்களில் டவுன் பஸ்கள் காலையில் சென்றால் மாலையில் திரும்பும்படி இயக்கப்படுகிறது.
சென்னை, திருப்பத்தூர், கடலூர், சிதம்பரம், திருப்பதி, திருப்பத்தூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. சுமார் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல தனியார் பஸ்களும் டீசல் தட்டுப்பாடு காரணமாக குறைந்த அளவிலேயே இயக்கப்படுகின்றன.
விழுப்புரம் கோட்டம்:
விழுப்புரம் கோட்டம் கள்ளக்குறிச்சி டிப்போவில் நேற்று அதிகாலை 4 மணி முதல் டீசல் இல்லாததால் பஸ்கள் இயக்கப்படவில்லை. தொலை தூர பஸ்கள் மற்றும் கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் டிப்போவிலேயே நிறுத்தப்பட்டன.
பின்னர் காலை 9 மணிக்கு மேல், 14,000 லிட்டர் டீசல், டேங்கர் மூலம் டிப்போவுக்கு கொண்டு வரப்பட்டது. தொலை தூர பஸ்களுக்கு வழக்கம்போல வழங்கப்படும் உரிய அளவு டீசல் வழங்கப்படவில்லை. தலா 30 லிட்டர் குறைத்தே வழங்கப்பட்டது.