சென்னை: தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் சுமார் 40,000 இடங்கள் காலியாக உள்ளன.
தமிழகத்தி்ல் உள்ள சுமார் ஆயிரம் அரசு, அரசு உதவிபெறும், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2.5 லட்சம் இடங்கள் உள்ளன.
இங்கு பி.ஏ, பிஎஸ்சி, பி.காம் உள்ளிட்ட படிப்புகள் போதிக்கப்படுகின்றன. ஆனால், இந்தக் கல்லூரிகளில் சேரும் ஆர்வம் மாணவர்களிடையே ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருகிறது.
இந்த ஆண்டு இந்தக் கல்லூரிகளில் சுமார் 40,000 இடங்கள் காலியாக உள்ளன.
இது குறித்து சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராமச்சந்திரன் கூறுகையி்ல்,
தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருபவர்களின் ஆர்வம் நகர்புறங்களில் மட்டுமின்றி கிராமப் புறங்களிலும் குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு கலைக் கல்லூரிகளில் 36,000 இடங்கள் காலியாக இருந்தன.
இந்த ஆண்டு 40,000 இடங்கள் காலியாக உள்ளன.
கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருபவர்களில் பெரும்பாலானவர்கள் பி.பி.ஏ., பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.காம் ஆகிய பாட பிரிவுகளில் சேரவே ஆர்வம் காட்டுகின்றனர் என்றார்.
வேலைவாய்ப்புகளுக்கேற்ற பாடத் திட்டங்களைக் கொண்டு வருவதன் மூலம் மட்டும் தான் கலை-அறிவியல் கல்லூரிகள் பக்கம் மாணவர்களை ஈர்க்க முடியும்.