மும்பை: புனே அருகே அழகிகளுடன் மது மற்றும் நடன விருந்தில் ஈடுபட்டிருந்த சுங்கத் துறை அதிகாரிகள் 22 பேரை அழகிகளுடன் சேர்த்து போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 22 பேரில் 12 பேர் கண்காணிப்பாளர் தகுதியில் உள்ள குரூப் 1 பிரிவைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், 10 பேர் இன்ஸ்பெக்டர் ரேங்க்கில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புனே அருகே உள்ள லோனவாலா (இதே பகுதியில்தான் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ நடந்து வருகிறது என்பது நினைவிருக்கலாம்) என்ற இடத்தில் உள்ள ஆடம்பர சொகுசு பங்களாவில் இந்த மது விருந்து நடந்துள்ளது. இவர்களை மகிழ்விப்பதற்காக விபச்சார அழகிகள் நடனமாடியும், மது பரிமாறியும் குஷிப்படுத்தியுள்ளனர்.
இங்குள்ள பங்களாவில் சுங்கத்துறை அதிகாரிகள் அழகிகளுடன் ஆபாச நடனமாடியும், மது அருந்தியும் கும்மாளம் போட்டு வருவதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து அங்கு போலீஸ் படை விரைந்தது.
அப்போது குடி போதையில் தடுமாறியபடி சுங்கத்துறை அதிகாரிகள் அழகிகளுடன் சேர்ந்து ஆபாச ஆட்டத்தில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்து போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
அத்தனை பேரையும் சுற்றி வளைத்துப் போலீஸார் கைது செய்தனர். இந்த மது விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்த கணவன், மனைவியையும் போலீஸார் கைது செய்தனர்.
சுங்கத்துறை அதிகாரிகளை குளிர்விப்பதற்காக ஆபாச நடனம் ஆடிய 10 பெண்கள், ஒரு கார் டிரைவர், பங்களா பராமரிப்பாளர் மற்றும் மேலும் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். ஏராளமான பணம், வெளிநாட்டு மது பாட்டில்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரையும், வட்கான் மாவல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அனைவரும் தலா ரூ. 5000 பணம் கட்டி ஜாமீனில் விடுதலையாகினர்.
இந்த பங்களா மும்பையைச் சேர்ந்த ஜவுளி ஏற்றுமதியாளரான யூசுப் மேமன் என்பவருக்குச் சொந்தமானது. தனக்கு தெரியாமலேயே இந்த பார்ட்டி நடந்ததாக அவர் போலீஸில் தெரிவித்துள்ளார்.
சுங்கத்துறை அதிகாரிகள், அழகிகளுடன் கூத்தடித்த விஷயம் மகாராஷ்டிராவை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.