சென்னை: போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக விடுதலைப் புலிகளும், இலங்கை அரசும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என முதல்வர் கருணாநிதி விருப்பம் தெரிவித்துள்ளார்.
திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்த திருமண விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தால்தான் போர் நிறுத்தம் சாத்தியமாகும். இரு தரப்புமே போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும்.
மாப்பிள்ளையும், பெண்ணும் மாலை மாற்றிக் கொண்டால்தான் திருமணம் முழுமை பெறும். அதேபோலத்தான், இலங்கையில் போர் நிறுத்தம் என்பது சம்பந்தப்பட்ட இரு தரப்புமே பேச்சுவார்த்தை நடத்தினால்தான் சாத்தியமாகும், முழுமை பெறும்.
ஒரு தரப்பு மட்டும் தன்னிச்சையாக போர் நிறுத்தத்தை அறிவித்தால், அதற்கு முழுமையான போர் நிறுத்தம் என்று பெயராகாது என்றார் அவர்.