சென்னை: தமிழ்நாடு கனிம வளத்துறையின் (TAMIN) முன்னாள் நிர்வாக இயக்குனர் சரவணன், அவரது மனைவி, வேலைக்காரப் பெண் ஆகியோர் கழுத்து அறுக்கப்பட்டு மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.
சென்னை அசோக் நகரில் உள்ள தனது வீட்டில் சரவணன் (74), அவரது மனைவி கஸ்தூரி (73), வேலைக்காரப் பெண் அன்பரசி (வயது 17) ஆகியோர் படுக்கை அறையில் கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் பலியாகிக் கிடந்தனர்.
வீடும் சூறையாடப்பட்டு தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இன்று அதிகாலையில் இந்தக் கொலை-கொள்ளை நடந்துள்ளன.
அசோக்நகர் போலீஸ் பயிற்சி கல்லூரியையொட்டியுள்ள நடேசன் சாலை- கண்ணப்பர் சாலை சந்திப்பில் உள்ள சரவணனின் பங்களாவில் இச் சம்பவம் நடந்துள்ளது.
இந்த பங்களாவின் கீழ்தளத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இயங்கி வந்தது. அண்மையில் அந்த வங்கி அங்கிருந்து காலி செய்யப்பட்டு வேறிடத்திற்கு மாற்றப்பட்டது.
சரவணன் உதவியால் கனிமவளத் துறையில் வேலை பார்த்த உன்னிகிருஷ்ணன் என்பவர் தினமும் காலையில் சரவணனின் வீட்டில் உணவு சமைத்துவிட்டுச் செல்வது வழக்கம்.
அதன்படி இன்று அதிகாலை 5.45 மணிக்கு சரவணனின் வீட்டுக்கு வந்த உன்னிகிருஷ்ணன், வாசல் கேட்டும், வீட்டுக்க தவும் திறந்து கிடப்பதைக் கண்டார். பால் பாக்கெட்டுகளும் எடுக்கப்படாமல் வாசலிலேயே கிடந்தன.
இதையடுத்து உன்னிகிருஷ்ணன் வீட்டுக்குள் சென்று குரல் கொடுத்துப் பார்த்தும் யாரும் வராததால் படுக்கை அறைக்குச் சென்றார். அங்கு மூவரும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாகிக் கிடந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்தை சென்னை நகர போலீஸ் கமிஷ்னர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர்.
பிரதேப் பரிசோதனைக்காக மூவரின் உடல்களும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.
சரவணன் வீட்டு கார் டிரைவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நேற்றிரவு சரவணனை ஒரு உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டு, திரும்ப அழைத்து வந்து வீட்டில் விட்டு விட்டு தன் வீட்டுக்கு சென்றதாகக் கூறியுள்ளார்.
எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது டாமி்ன் நிறுவனத்தின் தலைவராக இவர் இருந்தார். எம்ஜிஆருக்கும் நன்கு நெருக்கமானவராக இருந்தார்.
பெரும் செல்வந்தரான சரவணன் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இது நகை, பணத்துக்காக நடந்த கொலையா அல்லது வேறு காரணமா என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.
வீட்டிலிருந்த பல சொத்துப் பத்திரங்களும் காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளது. எனவே இந்தக் குடும்பத்துக்கு நெருக்கமான யாரோ தான் சொத்துக்களுக்காக கூலிப் படையை வைத்து இந்தக் கொலைகளைச் செய்திருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகிறது. கேட் மற்றும் கதவு திறந்து கிடந்ததை வைத்துப் பார்க்கும் போது சரவணனுக்கு நன்றாகத் தெரிந்தவர்கள் தான் இதைச் செய்திருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
1980களில் தமிழ்நாடு கனிம வளத்துறையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருந்த இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
தமிழகத்தில் இருந்து கிரானைட் கற்களை ஜெர்மனியில் ஒரு ஏஜென்ட் மூலம் ஐரோப்பிய நாடுகளி்ல் தவறான வழியில் விற்று வெளிநாடுகளில் ஏகப்பட்ட சொத்துக்களை குவித்ததாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அரசு நிர்வாகப் பணியில் சேரும் முன் பிரசிடெண்சி கல்லூரியிலும் சரவணன் புவியியல் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். அவரது மனைவி கஸ்தூரியும் தலைமைச் செயலகத்தில் சார்புச் செயலராகப் பணியாற்றி ஓய்வுப் பெற்றவராவார்.
கொலையுண்ட சரவணன், கஸ்தூரி தம்பதியிக்கு நாளை திருமண நாளாகும்.
சம்பவ இடத்தைப் பார்வையிட்ட சென்னை நகர கமிஷ்னர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் பேசுகையில், நள்ளிரவு 12 மணியிலிருந்து அதிகாலைக்குள் கொலைக் நடந்திருக்க வேண்டும்.
சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து கொலைக்கு பயன்படுத்திய கொலையாளிகள் அதை நான்றாகக் கழுவி வைத்து விட்டுச் சென்றுள்ளனர்.
கொலையுண்டவர்களின் உடலில் இருந்த நகைகள் அப்படியே உள்ளன. எனவே இதை வெறும் நகைக்காக நடந்த கொலையாகக் கருத முடியாது. கொலை பற்றிய துப்பு துலக்க இணை கமிஷனர் மேற்பார்வையில் 10 இன்ஸ்பெக்டர்களை கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றார்.
போலீஸ் பயிற்சி கல்லூரி அருகிலேயே நடந்துள்ள இந்த 3 கொலைகள் அசோக் நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.