டெல்லி: நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த ரூ.75 ஆயிரம் கோடி சிறப்புத் திட்டங்களை அறிவிக்கவிருக்கிறார் பிரதமரும், நிதியமைச்சருமான டாக்டர் மன்மோகன் சிங்.
இந்த வார இறுதிக்குள் இதுகுறித்த முறையான அறிவிப்பை வெளியிடவிருக்கிறார்.
பிரதமர் தலைமையில், தொழில்துறை அமைச்சர் கமல்நாத், ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பா ராவ், திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா ஆகியோர் அடங்கிய சிறப்புக் கமிட்டி இதுகுறித்து கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமை கூடி விவாதித்து இந்த முடிவை எடுத்துள்ளது.
நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்த தொகையில் ஒரு பகுதி செலழிக்கப்படும். ரிசர்வ் வங்கியின் அன்னியச் செலாவனி இருப்பில் 10 பில்லியன் டாலர்கள் வரை இதற்கென ஒதுக்கப்படும்.
இந்த 75 ஆயிரம் கோடி ரூபாய் திட்டம் தவிர, சிறப்புத் திட்டங்கள் சிலவற்றையும் அறிவிக்க பிரதமர் திட்டமிட்டுள்ளார். இவற்றின் மூலம் நாட்டின் ரியல் எஸ்டேட் மற்றும் ஜவுளித்துறையை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது அரசு.
இதுதவிர சிறு தொழில்களுக்கு உதவுவதற்காக ரூ.10000 கோடி வரை சிறுதொழில் வளர்ச்சி வாரியத்துக்கு (SIDBI) தரப்படும். தேசிய வீட்டு வசதி வங்கிக்கு ரூ.10000 கோடி வழங்கப்படும். இதன் மூலம் வீட்டு வசதிக் கடன்களை மீண்டும் குறைந்த வட்டியில் தர ஆவண செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மேலும் வீட்டு வசதிக் கடன்களின் வட்டி விகிதம் 9 சதவிகிதத்துக்குள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வசதியாக, அனைத்து வீட்டுக் கடன் நிறுவனங்களுக்கும் 6 முதல் 7 சதவிகித வட்டியிலேயே கடன்கள் வழங்கவும் தேசிய வீட்டு வசதி வங்கிக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.