டெல்லி: இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்த வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புவுக்கு அனுப்புவதாக பிரதமர் உறுதியளித்துள்ளார்.
இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி முதல்வர் கருணாநிதி தலைமையிலான தமிழக அனைத்துக் கட்சி குழு இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கோரிக்கை விடுத்தது.
இந்தக் குழுவில் அமைச்சர் அன்பழகன், மத்திய அமைச்சர் பாலு, காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு, சுதர்சனம், பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ், ஜி.கே.மணி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன், முஸ்லிம் லீக் சார்பில் காதர் மொய்தீன், அப்துல் பாசீத், விடுதலை சிறுத்தைகள் சார்பில் திருமாவளவன், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ராதிகா சரத்குமார், போட்டி மதிமுக சார்பி்ல் எல்.கணேசன் மற்றும் விஜய டி.ராஜேந்தர், ஆர்.எம்.வீரப்பன், பேராயர் எஸ்றா சற்குணம் உள்ளிட்டோர் இடம் பெற்றனர்.
அப்போது இலங்கை தமிழர்கள் படும் துன்பம் குறித்தும், இலங்கை ராணுவ தாக்குதலால் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவது பற்றியும், இலங்கை போரை நிறுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் குறித்தும் பிரதமரிடம் விளக்கமாக இந்தத் தலைவர்கள் விளக்கினர்.
அப்போது வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
இந்த பிரச்சனையில் இந்தியா உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளும் என்று உறுதியளித்த பிரதமர் தனது தூதராக பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்புவதாகவும் கூறினார்.
அவர் அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சேவிடம் போர் நிறுத்தத்தை வலியுறுத்துவார் என்றார்.
வழக்கம் போல அதிமுக, மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் இக்குழுவில் இடம் பெறவில்லை.
இதையடுத்து முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். அவரிடமும் இலங்கை போர் நிறுத்தத்தை வற்புறுத்தினார்.
பின்னர் கருணாநிதியை மின்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே, புதிய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட ப.சிதம்பரம் ஆகியோரும் சந்தித்தனர்.
போர் நிறுத்தமே முக்கியம்-கருணாநிதி:முன்னதாக டெல்லி வந்த கருணாநிதி சாணக்கியாபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சனையில் வைக்கப்படப் போகும் முக்கியமான கோரிக்கை எது?
கருணாநிதி: முக்கியமான கோரிக்கை போர் நிறுத்தம்தான்.
கேள்வி: கடந்த 3 மாதமாக அந்த கோரிக்கையைத் தானே வைத்துக் கொண்டிருக்கிறோம்?
கருணாநிதி: அதற்காக அந்தக் கோரிக்கையை மாற்றிக் கொள்ள முடியுமா?
கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக அவசரம் கருதி மத்திய அரசுக்கு திமுக அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற முடியாதா?
கருணாநிதி: திமுக மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்ப பெற வேண்டும், மத்திய அரசு கவிழ வேண்டும் என்பதுதான் உங்கள் விருப்பமா? திமுக மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்ப பெற்று விட்டால், இலங்கை தமிழர்களின் பிரச்சனை தீர்ந்து விடுமா?
கேள்வி: மத்திய அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் உங்களுக்கு திருப்தியாக உள்ளதா?
கருணாநிதி: இது தலைவலி மருந்து மாதிரி. மொத்தமாக போர் நிறுத்தம் ஏற்பட்டு, அங்கே தமிழர்கள் அமைதியாக வாழ்ந்தால்தான் எங்கள் திருப்திக்கு அர்த்தம் இருக்க முடியும்.
கேள்வி: இலங்கை தமிழர் போன்ற முக்கிய பிரச்சனையில் தமிழக கட்சிகளில் அதிமுக, மதிமுக, தேமுதிக, சிபிஎம் போன்ற கட்சிகள் பிரதமரை சந்திக்க உங்களுடன் வரவில்லையே?
கருணாநிதி: அதைப்பற்றி நான் ஏற்கனவே சொல்லி விட்டேன். எந்த அளவிற்கு தாழ்ந்து போய் வேண்டுகோள் விடுக்க முடியுமோ அந்த அளவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன். ஆனால் அவர்கள் அதை ஏற்பதாக இல்லை.
கேள்வி: பிரதமரிடம் வெள்ள நிவாரண உதவி கேட்பீர்களா?
கருணாநிதி: நிச்சயமாக கேட்கவிருக்கிறேன். பிரதமரிடமும், அமைச்சர் ப.சிதம்பரத்திடமும் தமிழக வெள்ள நிவாரணத்திற்காக உதவி நிதி கோரிக்கை வைக்கவுள்ளேன். எவ்வளவு என்பதை கேட்ட பிறகு சொல்கிறேன் என்றார்.