டெல்லி: நியூயார்க் இரட்டை கோபுரத்தை விமானத்தைக் கடத்தித் தாக்கி அழித்தது போல இந்தியாவின் முக்கிய இலக்குகளை விமானம் மூலம் தாக்கி அழிக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக இந்திய விமானப்படை தலைமை தளபதி பாலி ஹோமி மேஜர் தெரிவித்துள்ளார்.
கடற்படை தினத்தையொட்டி டெல்லி அமர்ஜவான் பகுதியில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் பாலி ஹோமி மேஜர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நியூயார்க்கில் நடத்தியதைப் போன்ற வான் வழித் தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இது ஒரு எச்சரிக்கைத் தகவலின் அடிப்படையில் கிடைத்தது. அரசுக்கு இந்த எச்சரிக்கை வந்துள்ளது. அதை சந்திக்க விமானப்படை தயாராக உள்ளது.
சமீபத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணியுடன் முப்படைத் தளபதிகளும் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தின் போது இதுகுறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
நேற்று நடந்த கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது.
தீவிரவாதிகளின் விமானக் கடத்தல் மற்றும் தாக்குதல் குறித்த தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து டெல்லி, பெங்களூர், சென்னை விமான நிலையங்களில் உச்சகட்ட பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி இந்தத் தாக்குதலை மேற்கொள்ள தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல் கூறுகிறது என்றார் அவர்.
முன்னதாக நேற்று நடந்த முப்படைத் தளபதிகளுடனான கூட்டத்தில் பேசிய அமைச்சர் அந்தோணி, மூன்று படைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நியூயார்க் தாக்குதல் போன்ற சம்பவம் நடந்து விட வாய்ப்பு கொடுக்காமல் மூன்று படையினரும விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
உளவுத் தகவல்களை முப்படை அதிகாரிகளும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ள வேண்டும்.
இந்தியாவின் கடல் பிராந்திய, வான் பிராந்திய மற்றும் நிலப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
இதையடு்த்து அனைத்து விமானங்களிலும் ஏர் மார்ஷெல்கள் செல்கின்றனர். ஆயுதம் தாங்கிய இவர்கள் சாதாரண பயணிகளுடன் கலந்து அமர்ந்திருப்பர்.
மேலும் விமான நிலையங்களில் சோதனைகள் மிக அதிகமாக இருப்பதால் அனைத்து விமானிகளும் 2 மணி நேரத்துக்கு முன்பே வந்துவிடுமாறு பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.