ஹைதராபாத்: ராஜூ ஹைதராபாத்தில் தான் உள்ளார். அவர் எங்கும் ஓடிப் போகவில்லை என்று சத்யம் நிறுவனத்தின் இடைக்கால நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள ராம் மைனாம்பதி கூறியுள்ளார்.
இன்று சத்யம் உயர் அதிகாரிகளுடன் நிருபர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
உலகம் முழுவதும் உள்ள எங்களது கஸ்டமர்களுடன் பேசி வருகிறோம். அவர்களிடம் உண்மை நிலையை விளக்கி வருகிறோம். அவர்களும் நிலைமையை புரிந்து கொண்டுள்ளார்கள்.
நிறுவனத்தின் நிதி நிலையை வெளிப்படையாக தெரிவிப்பது, நிர்வாகத்தை வெளிப்படையாக நடத்துவது தான் எங்களது முதல் வேலை.
இப்போது நடந்து கொண்டிருக்கும் பணிகளி்ல் தேக்கமோ, தடையோ ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம். பணியாளர்களின் வேலைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடு்க்கப்படும்.
ஆடிட்டர்கள் சொன்னதை வைத்துத் தான் இதுவரை செயல்பட்டோம். இப்போது நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை சுய முன்னணி ஆடிட்டர்களை வைத்து ஆய்வு செய்து வருகிறோம்.
நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான ஸ்ரீனிவாஸ் வட்லாமணி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அந்த ராஜினாமா ஏற்கப்படவில்லை.
நிர்வாக இயக்குனர்களுக்கு ராஜூ எழுதிய கடிதத்தில் உள்ள விவரங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். கஸ்டமர்களிடமிருந்து நிறுவனத்துக்கு வர வேண்டிய தொகை ஏராளமாக உள்ளது.
அதே நேரத்தில் கையிருப்பு நிலைமை கவலையளிக்கிறது. நிறுவனத்தின் செயல்பாட்டைத் தொடர எவ்வளவு நிதி தேவை என்பதை ஆய்வு செய்து வருகிறோம்.
ராஜூ முழு அளவில் எங்களுக்கு ஒத்துழைப்பதாகக் கூறியுள்ளார். ஆனால், இப்போது அவர் எங்களுடன் தொடர்பில் இல்லை. அவர் ஹைதராபாத்தில் தான் இருக்கிறார்.
அரசுடனும், செபியுடனும் முழு அளவி்ல் விசாரணைகளில் ஒத்துழைப்போம்.
நான் உள்பட இப்போது இடைக்கால நிர்வாகிகளாக பொறுப்பேற்றுள்ள யாரும் எந்த லாபத்தை எதிர்பார்த்தும் இந்தப் பொறுப்புகளை ஏற்கவில்லை. நிறுவனத்தை காக்கவே இந்தப் பொறுப்புகளை ஏற்றுள்ளோம்.
நடந்துள்ள முறைகேடு குறித்து நிர்வாக இயக்குனர் குழுவுக்கு எதுவும் தெரியாது என்பதே உண்மை என்றார்.