அங்கே வெட்டு..இங்கே குத்து.. 'விளங்க முடியா' தேர்தல் இது!
திருமஙகலம்: திருமங்கலம் தொகுதியில் அதிமுகவுக்குக் கிடைக்கும் வெற்றி வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோடியாக அமையும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கத்துக்கு ஆதரவாக இறுதிக் கட்டமாக நேற்று முகமதுஷாபுரம், சோமசுந்தரம் தெருவில் அவர் பேசுகையி்ல்,
எம்ஜிஆரின் எஃகு கோட்டையான திருமங்கலம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கம் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. ஆனால் இதைத் தடுக்க கடைசி நேரத்தில் அங்கே வெட்டு, இங்கே குத்து என்று நம்மை திசை திருப்பப் பார்ப்பார்கள். நாம் மிக கவனமாக இருக்க வேண்டும்.
மதுரையில் ஏற்கனவே இரண்டு இடைத் தேர்தல்கள் நடந்துள்ளன. அந்த தேர்தலில் பண பலத்தாலும், அதிகாரத்தை பயன்படுத்தியும் வெற்றியை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டார்கள். அதேபோல இந்த இடைத் தேர்தலிலும் வெற்றி பெற முயற்சிக்கிறார்கள்.
அவர்களது முயற்சி வெற்றி பெறாது. எங்கள் கூட்டணி வலுவான கூட்டணி. இந்த தேர்தல் வெற்றி வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோடியாக அமையும் என்றார்.
அதிமுகவினரை கடத்த சதி-டாக்டர் சேதுராமன்:அதிமுக கூட்டணியில் உள்ள அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் நம் செய்தியாளரிடம் பேசுகையில்,
திருமங்கலம் இடைதேர்தல் ஜனயாகப்படி நடைபெறுமா என்ற சந்தேகம் எனக்கு மட்டுமல்ல, தமிழகம் முழுக்க பலருக்கும் இந்த கேள்விக் குறி உள்ளது. அங்குபணநாயகம் விளையாடி வருகிறது.
எதிர்க்கட்சிகள் மீது திமுகவினர் வேண்டும் என்றே குற்றச்சாட்டு கூறுவதும், வன்முறையை கட்டவிழ்த்து விடுவதுமாக உள்ளனர்.
மேலும் அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கத்தின் தேர்தல் ஏஜெண்டுகளையே விலைக்கு வாங்க முயற்சி நடக்கிறது. சிலரை திமுகவினர் கடத்திச் செல்லவும் முயற்சி செய்கின்றனர் என்றார்.