சேலம்: 2020ம் ஆண்டு இந்தியர் ஒருவர், இந்திய விண்கலம் மூலம் நிலவுக்கு பயணப்படுவார் என்று சந்திராயன்-1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
சந்திராயன்-1 விண்கலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெற்றிகரமாக நிலவுக்கு செலுத்தப்பட்டது. உலக விண்வெளி அரங்கில் இந்தியா இதன் மூலம் தனி இடம் பிடித்தது.
இந்த நிலையில் சேலம் வந்த சந்திராயன்-1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, 2020ம் ஆண்டு ஆளுடன் கூடிய விண்கலம் சந்திரனுக்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவித்தார்.
இதுகுறித்து அண்ணாதுரை கூறுகையில், ஆளற்ற விண்கலத்தை அனுப்பியதன் மூலம் நமது விஞ்ஞானிகளுக்கு நல்ல நம்பிக்கையும், உற்சாகமும் பிறந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஆளுடன் கூடிய விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
2020ம் ஆண்டு இந்தக் கனவு நனவாகும். சந்திராயன் 2 திட்டம் இன்னும் 2 ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும். சந்திராயன் 3 அதைத் தொடர்ந்து நிறைவேற்றப்படும்.
சந்திராயன்-1 திட்டத்தின் மூலம் நமக்கு பல தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை விஞ்ஞானிகள் ஆய்ந்து வருகிறார்கள்.
பொது சந்திரன் ஆய்வு மையத்தை அமைப்பது தொடர்பாக இந்தியாவை பல்வேறு நாடுகள் அணுகியுள்ளன என்றார் அண்ணாமலை.