சென்னை: தமிழகத்தில் 5வது கட்டமாக மேலும் 40 லட்சம் இலவச வணணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வினியோகிக்கப்படவுள்ளன.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
முதல்வர் கருணாநிதி தலைமையில் அமைக்கப்பட்ட இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்குவது குறித்த சட்டமன்றக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவின் 16வது கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்த இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டம் அண்ணா பிறந்த பொன்னாளான 15.9.2006 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
முதற்கட்டமாக 30,000 தொலைக்காட்சிப் பெட்டிகளும், இரண்டாவது கட்டமாக 25 லட்சம் தொலைக்காட்சிப் பெட்டிகளும், மூன்றாம் கட்டமாக 37.5 லட்சம் தொலைக்காட்சிப் பெட்டிகளும் வழங்கப்பட்டன.
நான்காம் கட்டமாக 41.62 லட்சம் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்ய ஆணைகள் வழங்கப்பட்டு, 31.10.2009 வரை 26,81,899 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் பொது மக்களுக்கு வினியோகிப்பதற்காக மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நான்கு கட்டங்களிலும், மொத்தம் ரூ.2,268 கோடி செலவில் 1 கோடியே 4 லட்சத்து 42 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு தொலைக்காட்சிகள் வழங்க அனுமதிக்கப்பட்டு,
ரூ. 2,037 கோடி செலவில் இதுவரை 85.15 லட்சம் குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டுவிட்டன. மேலும் தொடர்ந்து வழங்கப்பட்டும் வருகின்றன.
இன்று நடந்த சட்டமன்றக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டத்தில், இத் திட்டத்தின்கீழ், நான்காம் கட்டத்தில் 8,37,500 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை கூடுதலாகக் கொள்முதல் செய்யலாம் என்றும்;
ஐந்தாம் கட்டமாக 2009- 2010ம் ஆண்டில், மேலும் 40 லட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளைக் கொள்முதல் செய்யலாம் என்றும், இக்கொள்முதல் தொடர்பாக 2009 நவம்பர் மாத முதல் வாரத்தில் சர்வதேச டெண்டர்களைக் கோருவது என்றும், 2009 டிசம்பர் மாத மத்தியில் டெண்டர்களை திறப்பதென்றும், டிசம்பர் மாத மூன்றாம் வாரத்தில் டெண்டர்களை முடிவு செய்வது என்றும்,
2010ம் ஆண்டு பிப்ரவரி தொடங்கி டிசம்பர் வரை 40 லட்சம் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளையும் பொது மக்களுக்கு வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
கருணாநிதியுடன் உலக வங்கி இயக்குனர் சந்திப்பு:
இதற்கிடையே இன்று முதல்வர் கருணாநிதியை உலக வங்கியின் இந்தியாவிற்கான இயக்குனர் ராபர்டோ ஜகா, மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். அப்போது நிதியமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், உலக வங்கியின் இந்தியாவிற்கான ஆலோசகர் ரஷீத் பென்மசூத் ஆகியோர் உடனிருந்தனர்.
ஸ்டாலினுடன் யுஸ் அரசியல் தலைவர்கள் சந்திப்பு:
இந் நிலையில் நேற்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் அமெரிக்க நாட்டின் ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளின் இளம் அரசியல் தலைவர்கள் சந்தித்துப் பேசினர்.