நெல்லை: நெல்லை கோர்ட்டில் பெண் குமஸ்தாவை ஏமாற்றி பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணத்துடன் தலைமறைவான அதிமுக பிரமுகரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் ரோட்டில் பல கோடி மதிப்புள்ள நிலம் தொடர்பான வழக்கு நெல்லை உரிமையியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நிலத்துக்குரிய ஆவணங்கள் அனைத்தும் கோர்ட்டில் உள்ளது.
இதற்கிடையே பாளையங்கோட்டை சாந்தி நகரை சேர்ந்த அதி்முக பிரமுகர் கொடியங்குளம் குமார் என்பவர் கோர்ட்டிற்கு சென்று அங்குள்ள உதவியாளர் ஜெயபால் என்பவரிடம் நிலத்தின் பத்திரத்தை ஜெராக்ஸ் எடுத்து விட்டு ஓரிஜினலை திருப்பி தந்து விடுவதாக கூறியுள்ளார். இதையடுத்து அங்குள்ள பெண் கிளார்க் மூலம் பத்திரத்தை வாங்கி குமாரிடம் கொடுத்துள்ளார்.
ஆனால் குமார் ஜெராக்ஸ் எடுக்காமல் ஏமாற்றி விட்டு ஓரிஜனல் பத்திரத்துடன் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து ஜெயபால் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் முகமது மைதீன், சப்-இன்ஸ்பெக்டர் இருளப்பசாமி ஆகியோர் விசாரணை நடத்தி குமாரை தேடி வருகின்றனர்.
கோர்ட் ஆவணத்தை அனுமதியின்றி கொடுத்த பெண் கிளார்க் மற்றும் உதவியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.