ஹைதராபாத்: பல்வேறு முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களின் நேரடி மற்றும் மறைமுக சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் வலியுறுத்தியுள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தும், ஹவாலாவில் ஈடுபட்டும் இப்போது வசமாக சிக்கியுள்ளார் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மது கோடா.இந்த நிலையில் ஏ.பி.பரதன் இந்த கோரிக்கையை எழுப்பியுள்ளார். இதுகுறித்து ஹைதராபாத்தில் ஏ.பி.பரதன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நமது நாட்டின் அரசியல் மற்றும் சமூக அடித்தளங்களை ஊழல் மெல்ல மெல்ல தின்று வருகிறது. இதில் மதுகோடா மட்டும் இல்லை. பல்வேறு முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களின் நேரடி மற்றும் மறைமுக சொத்து விவரங்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.
அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சிபிஐ, நீதித் துறை என இவற்றின் எந்தத் துறையின் மூலமாகவும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றார் பரதன்.