தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே ஒரே கயிற்றில் உடல்களை கட்டிக் கொண்டு, தனது 3 குழந்தைகளுடன் கர்ப்பிணிப் பெண் தற்கொலை செய்து கொண்ட கொடுமை நடந்துள்ளது.
இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை அருகே கல்லணை கால்வாயிலிருந்து பிரிந்து வரும் கல்யாண ஓடை ஆற்றில் இன்று காலை ஒரு சிறுமியின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்தனர். அந்த உடலை மீட்டபோது இன்னொரு சிறுமியின் உடலும் வந்தது. சிறிது நேரத்தில் மேலும் ஒரு சிறுமியின் உடலும் வந்தது. இதனால் போலீஸார் குழப்பமடைந்தனர். சற்று நேரத்தில் ஒரு பெண்ணின் உடலும் வந்தது. அந்தப்பெண் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது.
இந்த நான்கு உடல்களும் நீண்ட கயிறால் ஒன்றோடொன்று இணைக்ப்பட்டிருந்தன. பிணமாக வந்த பெண்ணுக்கு 35 வயது இருக்கலாம். குழந்தைகளுக்கு 5 முதல் 7 வயது இருக்கலாம் எனத் தெரிகிறது.
இவர்கள் யார், எப்படி இறந்தார்கள், எங்கு குதித்தார்கள் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இவர்கள் கொலை செய்து ஆற்றில் தூக்கி வீசப்பட்டார்களா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !