சபரிமலை: சபரி்மலை ஐயப்பன் கோவில் பாதுகாப்புக்காக கூடுதலாக 2 கம்பெனி போலீசார் வந்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 16ம் தேதி முதல் மண்டல பூஜைகள் தொடங்கி நடந்து வருகின்றன. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு தொடக்கத்திலேயே அதிக அளவு பக்தர்கள் சபரிமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
சபரிமலையில் பக்தர்கள் போல் தீவிரவாதிகள் ஊடுருவலாம் என்ற அச்சுறுத்தலால், கடந்த ஆண்டே பாதுகாப்பு பணியில் மத்திய போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த ஆண்டும் சபரிமலையில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
தற்போது சபரிமலை பாதுகாப்பு பணியில் ஏடிஜிபி சந்திரசேகர் மேற்பார்வையில் பம்பையில் 1 எஸ்பி தலைமையில் 6 டிஎஸ்பிக்கள், 13 இன்ஸ்பெக்டர்கள், சன்னிதானத்தில் 11 டிஎஸ்பிக்கள், 21 இன்ஸ்பெக்டர்கள், 46 சப்-இன்ஸ்பெக்டர்கள், உள்பட 1300 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது தவிர 30 காமாண்டோ வீரர்கள், வெடிகுண்டு பிரிவு போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.