மும்பை: சிவசேனா தொண்டர்கள் மும்பையில் உள்ள ஐபிஎன் லோக்மாத் மராத்தி டிவி அலுவலகத்தை தாக்கி சூறையாடினர்.
பத்திரிகை அலுவலகத்திற்குள் புகுந்த குண்டர்கள், பத்திரிக்கையாளர்களையும் தாக்கிக் காயப்படுத்தினர்.
லோக்மாத் அலுவலகம் மட்டுமல்லாது, ஐபிஎன்7 சானல் அலுவலகத்தையும் தாக்கி சூறையாடினர். இது இந்தி சானலாகும். இந்த இரு சானல்களும் ஐபிஎன் குழுமத்தைச் சேர்ந்தவையாகும்.
உள்ளே நுழைந்த அக்கும்பல் பத்திரிக்கையாளர்களையும், ஊழியர்களையும் கண்மூடித்தனமாக தாக்கினர். உடைகளையும் கிழித்தனர். சொத்துக்களை சூறையாடினர். சிவசேனாவை விமர்சனம் செய்து செய்தி வெளியிட்டால் தாங்கிக் கொள்ள மாட்டோம் என்றும் ஆவேசமாக எச்சரிக்கை விடுத்தனர்.
ஐபிஎன் லோக்மாத் செய்தியாளர் சந்தீப் சவான் கூறுகையில், ஆசிரியர் நிகில் வாக்லேவைத் தேடித்தான் அவர்கள் கொலை வெறியுடன் தாக்குதல் நடத்தினர். அவருக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் கூக்குரலிட்டனர். இரும்புக் கம்பி, பேஸ்பால் பேட்கள், கிரிக்கெட் பேட்களுடன் அவர்கள் வந்திருந்தனர் என்றார்.
இந்த சம்பவத்தை மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் கடுமையாக கண்டித்துள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என கூறியுள்ளார்.