கொழும்பு: கிரிக்கெட்டில் இருந்து 2011ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்னதாகவே ஓய்வு பெறப் போவதாக இலங்கை அணி வீரர் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் பல பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வரும் ஆஃப் ஸ்பின்னர் முத்தையா முரளிதரன், அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடருக்கு பின் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே கூறியிருந்தார்.
ஆனால், தற்போது இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் போட்டிகளில் எதிர்பார்த்த அளவுக்கு ஆட முடியாததால், நம்பிக்கை இழந்து காணப்படும் முரளிதரன் 2011க்கு முன்பாகவே ஓய்வு பெற்றுவிடுவேன் என்று விரக்தியுடன் கூறி வருகிறார்.
'எனக்கு 37 வயது ஆகிவிட்டது. 16 ஆண்டுகளுக்கு மேல் விளையாடி மிகவும் சோர்ந்து போய்விட்டேன். அதனால் அந்த நாட்களைப் போல என்னால் விளையாட முடியவில்லை.
இப்போதைக்கு ஒருநாள் போட்டிகளி்ல் மட்டும் விளையாடலாமா என யோசிக்கிறேன். எதுவும் சரிவரவில்லை என்றால் அடுத்த உலககோப்பைக்குள் முழுவதுமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுக்கொள்வேன்.
என் உடம்பு எந்தளவு ஒத்துழைக்கிறதோ அதைப் பொறுத்துதான் எல்லாம். இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இப்படி இல்லை. ஒரு காலத்தில் விக்கெட்டுக்காக அணி என்னை நம்பியிருந்த காலம் உண்டு. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.
ஆனால் நல்ல திறமையாக நான் கிரிக்கெட்டை விளையாடி வந்திருக்கிறேன் என்ற சந்தோஷமும், பெருமையும் எனக்கு உள்ளது' என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் முரளிதரன் கூறியுள்ளார்.