மன்னார்குடி: மன்னார்குடியில் மர்மமான முறையில் சுற்றித் திரிந்த இலங்கையைச் சேர்ந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மன்னார்குடியில் கடந்த 2 மாதங்களாக ஒரு இளைஞர் சுற்றித் திரிந்துள்ளார். அங்குள்ள ஒரு சைக்கிள் கடையில் சைக்கிளை வாடகைக்கு எடுத்தார். பின்னர் திருப்பிக் கொடுத்தார்.
ஆனால் சைக்கிளுக்கான வாடகையைத் தரவில்லை. கடைக்காரர் கேட்டபோது அவரை மிரட்டியுள்ளார் அந்த நபர். இதையடுத்து அப்பகுதியினர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த போலீஸார் அந்த நபரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் முகம்மது ரிபக் என்றும், இலங்கையைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.
அவரிடம் 2 அடையாள அட்டைகள் 18 கிரெடிட் கார்டுகள், 5 ரேஷன் கார்டுகள் இருந்தன. இவ்வளவு கார்டுகளை இந்த நபர் வைத்திருப்பதால் இவர் மீதான சந்தேகம் போலீஸாருக்கு வலுத்துள்ளது.
இதையடுத்து தற்போது கியூ பிரிவு போலீஸார் இந்த நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.