லக்னோ: பாஜகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சிக்குத் திரும்ப வேண்டும் என பாஜக புதிய தலைவர் நிதின் கத்காரி விடுத்துள்ள கோரிக்கையை முன்னாள் உ.பி. முதல்வர் கல்யாண் சிங் நிராகரித்துள்ளார். தான் புதுக் கட்சி ஆரம்பிப்பது உறுதி என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கல்யாண் சிங் கூறுகையில், புதிய கட்சிக்கான பதிவுக்கு விண்ணப்பித்துள்ளோம். இதுதொடர்பான அனைத்து ஆவணங்களையும் நேற்றுதான் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தோம். ஜனவரி 5ம் தேதி புதுக் கட்சி தொடங்கப்படும்.
புதுக் கட்சி தொடர்பாக எனது ஆதரவாளர்கள் மாநிலம் முழுவதும் தொடர் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும், புதுக் கட்சி ஆரம்பிப்பது என்பது எனது இறுதி முடிவாகும். இதில் எந்த மாற்றமும் இல்லை.
மீண்டும் பாஜகவில் சேருவதோ என்ற கேள்விக்கு இடமில்லை. அதேபோல வேறு எந்தக் கட்சியிலும் நான் சேர மாட்டேன். இதுவும் எனது இறுதி முடிவாகும் என்றார்.