கான்பெரா: இந்தியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களில் சில, உண்மையில் இனவெறி அடிப்படையிலானதே என்று ஆஸ்திரேலியே வெளியுறவு அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதான தாக்குதல் குறித்து நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் தெரிவிக்கையில்,
'ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது கடந்த சில காலமாக நடத்தப்படும் தாக்குதல் ஆஸ்திரேலிய கல்வித் துறையை பாதிப்பது மட்டுமல்லாமல், இருநாடுகள் சம்பந்தப்பட்ட வெளியுறவு திட்டங்களையும் பாதிக்கிறது.
இந்தியர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களில் சில இனவெறி அடிப்படையிலானவை என்று கருதப்படுகிறது. இதுபோன்ற தாக்குதல்களை மன்னிக்க முடியாதவை.
அரசு இதுகுறித்து தீவிரமாக பரிசீலித்து நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இச்சம்பவங்களால் இந்திய மக்களிடையே ஆஸ்திரேலியாவுக்கு இருந்த மதிப்பு குறைந்துவிட்டது.
இவற்றை இந்தியா மற்றும் தெற்காசியாவை தாண்டி உலகம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மாணவர்களின் சரணாலயமாக ஆஸ்திரேலியா மாறியுள்ளது. தற்போது சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தியா உலக அளவில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் ஜனநாயக சக்தி என்ற அடிப்படையில் அந்நாட்டுடனான உறவில் எவ்வித விரிசலும் ஏற்படாமல் பாதுகாக்கப்பட
வேண்டும்.
எனவே இனவெறி அடிப்படையில் இந்தியர்களை தாக்கிய தீய சக்திகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது அவசியம் என்ற அடிப்படையில் அரசு செயல்படுகிறது.